வளைகுடாவில் அமைதி நிலவும் நாடுகளில் முதலிடத்தில் கத்தார், இந்தியாவுக்கு உலகளவில் 128வது இடம்.

Doha beach and skyscrapers.

குவைத் சிட்டி : சிட்னியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொருளாதார மற்றும் அமைதிக்கான மையம் பிரபல பத்திரிகையான எக்கானமிஸ்டுடன் இணைந்து ஒரு நாட்டில் நடைபெறும் கொலைகள், குற்றங்கள், சமூக அமைதியின்மை, ராணுவத்திற்கு செலவிடப்படும் நிதி, அந்நாட்டின் கைதிகள் போன்ற தகவலின் அடிப்படையில் உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலை தயாரித்துள்ளது.

அப்பட்டியலில் குவைத் வளைகுடாவில் மூன்றாமிடத்திலும் உலகில் 39வது இடத்திலும் உள்ளது. கத்தார் வளைகுடாவில் முதலாவது இடத்திலும் உலகில் 15வது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கத்தாரை தொடர்ந்து ஓமன் வளைகுடாவில் 2வது இடத்திலும் உலகில் 23வது இடத்திலும் உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் வளைகுடாவில் 4வது இடத்திலும் உலகளவில் 44வது இடத்திலும் உள்ளது. அதனை தொடர்ந்து பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியா பட்டியலிடப்பட்டுள்ளது. உலகளவில் நியூசிலாந்து மிக அமைதியான நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தை தொடர்ந்து ஐஸ்லாந்து, ஜப்பான், ஆஸ்திரியா, நார்வேயும் மிக அமைதியான நாடாக பட்டியலில் உள்ளது. அமெரிக்காவை விட மிக அமைதியான நாடாக கியூபாவும் சீனாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா 85ஆம் இடத்திலும் சீனா 80ஆம் இடத்திலும் உள்ளது. இந்தியாவும் 20 இடங்கள் பின் தங்கி 128ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஈராக், சோமாலியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் அமைதியிழந்த நாடுகளாக பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

inneram.com

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை ; எதிர்வரும் லோக்சபா தேர்தலில் ஒட்டு போட முடியும்

புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் நீண்டகால கனவான ஓட்டு போடும் உரிமை நிறைவேற இன்னும் கொஞ்சம் காலம் தான் இருக்கிறது. இதற்கான அடிப்படை பணிகள் ஒரளவுக்கு முடிந்து காபினட் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் இந்த சட்டம் முழுமை பெறும்போது இரட்டை ஓட்டுரிமை பெற்றவர்களாக மாறுவர். டில்லியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றும் இவர்களுக்கு கவுரவிக்கும் வகையில் ஓட்டுரிமை கிடைக்க வழி செய்யப்படும் என்று அறிவித்தார். இதன்படி தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு அமைச்சர் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியன் நலன் துறை அமைச்சர் வயலார் ரவி, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சிலால், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த குழுவின் ஒப்புதல் மத்திய காபினட் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் . பின்னர் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் அங்கீகாரம் பெற்று முழுமை பெறும்.

ஓட்டு போட ரெடியாகிடுங்க ! : இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அமைச்சர் வயலார் ரவி கூறுகையில்; இந்த சட்ட முன்னேற்பாடு அனைத்து பணிகளும் தயாராகி விட்டன. வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஜனநாயக கடமையை பூர்த்தி செய்வதன் மூலம் இந்திய வளர்ச்சிக்கு துணையாக இருக்க முடியும் என்றார்.

படிப்பு மற்றும் பணி காரணமாக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கும் ஓட்டு பட்டியலில் பெயர் நீடித்து இருக்க சில சலுகைகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு விடும் , வரும் லோக்சபா தேர்தலில் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ஓட்டு போட ரெடியாகிடுங்க !

dinamalar.com