மனைவியின் கடமைகள்

மனைவியின் கடமைகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, December 19, 2009, 13:04

இஸ்லாம்

இல்லறக் கடமைகளில் முக்கியமான ஒன்று, கணவனுக்கு மனைவி கட்டுப்படுதல் ஆகும்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

பெண்களை நிர்வகிப்பவர்கள் ஆண்கள் என்பதற்கு அல்லாஹ் இரண்டு காரணங்களைக் கூறுகிறான். ஒன்று, அவன் இயற்கையிலேயே ஆண்களை சிறப்புமிக்கவனாகப் படைத்துள்ளான். இரண்டாவது, பெண்களுக்கு ஆண்கள் செலவு செய்வதால்.

இந்த இரண்டு காரணங்களால் பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்கள் பெறுகிறார்கள். எனவே ஒரு குடும்பத்தை நிர்வகிப்பவன் ஆண் என்று அல்லாஹ் கட்டளையிட்ட பின்னர் பெண்கள் அதை ஏற்று நடப்பது கட்டயாமாகும்.

மார்க்கத்திற்கு முரண் இல்லாத அனைத்துக் கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமையாகும். இதை அல்லாஹ் “கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்” என்று குறிப்பிடுகிறான்.

இந்த இறைக் கட்டளையை ஏற்று, மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாகும். கணவனுக்குக் கட்டுப்படுதல் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

“நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1079

இந்த நபிமொழி கணவனுக்குக் கட்டுப்படுதலின் உச்சக்கட்டத்தைத் தெரிவிக்கும் செய்தியாகும். இந்தச் செய்தியைப் படிக்கும் பெண்கள் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்வர்.

ஒழுக்கம் பேணுதல்

கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் முதல் கடமை கணவனின் இடத்தில் மற்றொரு ஆணை வைக்காமல் இருப்பதாகும். தன் கற்பொழுக்கத்தைப் பேணுவதாகும். கணவனுக்குக் கடும் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதில் முதலிடம் வகிப்பது இந்த ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள் தான் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:31)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 33:35)

“உங்கள் படுக்கையை அடுத்தவர்களுக்கு வழங்காமல் இருப்பதும் அவர்களின் அனுமதி இல்லாமல் மற்றவர்களை வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதும் பெண்களின் மீது கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 1083

பெண்கள் ஒழுக்கமாக வாழ்வது மிக முக்கியம் என்பதால் பெண்ணின் ஒழுக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் பல காரியங்களை இஸ்லாம் தடுத்துள்ளது. அதைப் பெண்கள் பேணி, கடைப்பிடித்தால் அவர்களது வாழ்க்கை ஒழுக்கமிக்கதாக அமையும்.

அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது

ஆண்களைக் கவரும் வண்ணம் அலங்காரங்களை அந்நியர்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது. தன் அலங்காரங்களை கணவனுக்கு மட்டுமே காட்டும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன் 24:31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33:59)

மேற்கூறிய வசனங்கள் பெண்களின் ஒழுக்கம் தொடர்பாக அறிவுரை கூறும் வசனங்களாகும். “பெண்கள் அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது” என்ற ஒரு அறிவுரை இந்த வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது.

அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள் ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.

உதட்டுச் சாயம் பூசுவது, நகைகளால் ஜோடனை செய்வது, மேக்கப்’ பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது, இவை ஜீனத் என்ற சொல்ரில் அடங்கும்.

எனவே இவ்வசனத்தில் கூறப் படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக் கூடாது.
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா’ புர்கா’ துப்பட்டி’ என்றும் குறிப்பிடப்படுகின்றது.

ஹிஜாப் என்பது பெண்ணின் பாதுகாப்புக்காகவும், அவர்களைக் கவுரவிப்பதற்காகவுமே ஏற்படுத்தப் பட்டுள்ளது என்பதை முதலில் இஸ்லாமிய பெண்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் நிறம், அல்லது அவர்களின் அழகு, அல்லது அவர்களின் இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்க விரும்புகின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. ஆண்களின் அழகையோ, கட்டுடலையோ, கொள்ளை கொள்ளும் நிறத்தையோ பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்று இதற்கு அர்த்தமில்லை. நிச்சயமாக இதையெல்லாம் பெண்கள் விரும்பவே செய்வர்.

கணவன் கட்டுடலுடன் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது அவனிடம் முழுமையான ஆண்மை இருக்கும் என்று நம்புவதால் தான். கணவன் நல்ல அழகுடனும் நல்ல நிறம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது மற்ற பெண்களிடம் பெருமையடிக்கவும் தங்கள் வாரிசுகள் அழகுடன் பிறக்க வேண்டும் என்பதற்காகவும் தான். ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதில் இருந்தும், ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிரிருந்தும் கூட இதை அறியலாம். ஆண்களும் பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணொருத்தியிடம் எதை எல்லாம் பார்த்து ஒரு ஆண் ரசிக்க விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். முறையின்றி பார்ப்பவனுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும் அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதை அன்றாடம் காண முடிகின்றது. இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந் திருப்பதற்கு முதற்காரணம், பெண்களின் அரைகுறை ஆடைகளும் ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே. எனவே ஒழுக்கத்தை பேணும் பெண்கள் மறைக்க வேண்டிய பகுதிகளை அந்நியர்களிடம் மறைப்பதும் அலங்காரங்களை கணவனுக்கு மட்டும் வெளிபடுத்துவதும் அவசியமாகும்.

ஆனால் இன்று அரைகுறை ஆடைகளுடன் அந்நியர்களுக்கு மத்தியில் பெண்கள் வருவதைப் பார்க்க முடிகிறது. வீட்டிற்கு வரும் வேலையாட்கள், பால்காரர்கள், கேபிள் காரர்கள் என்று ஏராளமான அந்நியர்களுக்கு முன்னால் நைட்டியை அணிந்து கொண்டு காட்சி தருவது மேற்கூறிய இறைவசனத்தின் ஒழுக்க அறிவுரைக்கு முரணானதாகும். இரவு நேர ஆடைகளை இரவு நேரத்தில் வீட்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெருவில் அந்த ஆடைகளை அணிந்து கொண்டே தண்ணீர் பிடிப்பது, மளிகைக் கடை, பால் கடைகளுக்கு போவது ஒழுங்கீனமாகும்.

சில பெண்கள் பர்தா அணியாமல் மெல்லிய சேலைகளை அணிந்து கொண்டு வெளியில் சென்று வருவதும் இஸ்லாமிய ஒழுக்க அறிவுரைக்கு மாற்றமானதாகும்.

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்) மக்களில் சிலர் பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பவர்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்) மெல்லிய உடையணிந்து தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன் பால் ஈர்க்கக் கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை (முடி) கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக் கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். (ஏன்?) சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4316

மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளைக் கவனத்தில் கொண்டு ஒழுக்கத்தை முஸ்லிம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

அபுரபீஹா
tntj.net என்ற தளத்திலிருந்து….

வரதட்சணைக் கொடுமையும் நிரந்தர நரகமும்

வரதட்சணைக் கொடுமையும் நிரந்தர நரகமும்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, December 15, 2009, 16:11

இஸ்லாம்

எம். ஷம்சுல்லுஹா

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்கள் ஏற்கனவே இருந்து வந்த மதக் கலாச்சாரங்களிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை.

விட்ட குறை தொட்ட குறை என்பது போல், தாங்கள் விட்டு வந்த கலாச்சாரங்களை இஸ்லாத்திற்கு வந்த பின்பும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் திருக்குர்ஆனோ இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றச் சொல்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான். (அல்குர்ஆன் 2:208)

பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஏதோ ஒப்பு சப்புக்காக இஸ்லாமிய கடமைகளில் ஒன்றிரண்டைப் பின்பற்றி விட்டு மற்றவற்றில் தங்கள் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் நடந்து கொள்கின்றனர்.

இவ்வாறு சொந்த விருப்பங்களின் அடிப்படையில் நடக்கக் கூடிய விஷயங்களில் ஒன்று தான் வரதட்சணை! இந்த வரதட்சணை மற்றும் அதனால் ஏற்படும் சமூகக் கொடுமைகளை எதிர்த்து, தவ்ஹீது ஜமாஅத் போரிடுவது போன்று வேறெந்த ஜமாஅத்தும் போரிடவில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

எத்தனையோ இளைஞர்கள் இந்தப் பிரச்சாரத்தால் கவரப்பட்டு, மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன் வந்தது, இன்னும் முடித்துக் கொண்டிருப்பது, ஏற்கனவே திருமணம் முடித்தவர்கள் தாங்கள் பெண் வீட்டில் வாங்கிய பொருட்களைத் திருப்பிக் கொடுப்பது போன்ற காரியங்களெல்லாம் நடப்பது ஒரு சரித்திர மாற்றமாகும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மறுமை பயம் தான்! அந்த மறுமை பயத்தைப் பிரச்சாரத்தின் போது ஊட்டியதால் தான் இந்த மாற்றமும் மறுமலர்ச்சியும்!

இதனுடைய முன்னேற்றம் தான் வரதட்சணை திருமணத்தை மக்கள் புறக்கணிக்க முன்வந்த காரியம்! எத்தனையோ சகோதரர்கள் தங்களின் சொந்த சகோதரர்களின் திருமணத்தைக் கூட புறக்கணித்து விட்டு, சாப்பிடாமல் பட்டினி கிடக்கும் இந்தப் போரட்ட உணர்வு, புரட்சித் தீ தொடர்ந்து பற்றி எரியுமானால் இன்ஷா அல்லாஹ் பெருமளவில் இந்த வரதட்சணை எனும் கொடுமையை சுட்டுப் பொசுக்கலாம். ஆனால் இதை ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களே சரியாகப் பேணுவது கிடையாது.

இந்த வரதட்சணை ஏற்படுத்திய மோசமான விளைவுகளைப் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்குத் தீமை என்று வெளிப்படையாகத் தெரியும் விஷயம் தான் வரதட்சணை!
இன்று பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது, பெண்ணினம் கருவில் உருவாகும் போதே நவீன கருவிகள் மூலம் கண்டறியப் பட்டு அதைக் கொலை செய்வது, நீண்ட காலம் ஆகியும் திருமணமாகாமல் பெண்கள் விபச்சாரத்தை நோக்கி ஓடுவது போன்ற குடும்ப மற்றும் சமூக ரீதியான தீமைகள் அனைத்திற்கும் காரணமே வரதட்சணை தான்! வரதட்சணை வாங்கியவர்களிடம் இந்தப் பாவங்களுக்கெல்லாம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப் போவது கிடையாது.

அல்லாஹ் கணக்கு தீர்க்கும் பாவங்களின் பட்டியலில் இன்னும் சில பாவங்களும் சேர்கின்றன. அந்தப் பாவங்கள் எவை என்பதை விளக்குவது தான் இக்கட்டுரையின் நோக்கம்!

பிள்ளைகளிடம் பாரபட்சம்

எல்லாவற்றிற்கும் வழி காட்டும் மார்க்கம், தாய் தந்தையர் தமது பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் வழி காட்டுகின்றது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு எப்படி அன்பளிப்பு வழங்க வேண்டும் என்பதும் அந்த வழி காட்டல்களில் உள்ள ஒன்றாகும்.
நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு பின்வருமாறு அறிவித்தார்கள்:

என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த் ரவாஹாவின் வாயிலாக எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! உங்கள் பிள்ளைகளிடையே நீதம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, அன்பளிப்பை ரத்து செய்தார்.

அறிவிப்பவர்: ஆமிர் பின் ஷர்ஹபீல், நூல்: புகாரி 2587

மற்றொரு அறிவிப்பில், “நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
நீதமாக நடந்து கொள்ளுங்கள்! நீதம் தவறினால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! பாவத்திற்கு என்னை சாட்சியாளனாக ஆக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் வழங்கும் அன்பளிப்புகளில் நூல் பிடித்தாற்போல் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.
ஆனால் நடைமுறையில் பிள்ளைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் அன்பளிப்பு விஷயத்தில் மிக அதிகமாகவே பாரபட்சம் காட்டுகின்றனர். குறிப்பாக, பெண் மக்களுக்கு திருமணத்தின் போது நகை வடிவத்தில் வழங்குகின்ற அன்பளிப்பைப் போன்று ஆண் மக்களுக்கு வழங்குவதில்லை. பெண் மக்களுக்கு மத்தியிலேயே மூத்த மகளுக்கு ஒரு விதம், இளைய மகளுக்கு மற்றொரு விதம் என்று அவர்களுக்கு அளிக்கும் நகை, நிலம், சீர் வரிசைகளில் வேறுபாடுகள் காட்டுவது சர்வ சாதாரணமாக நடக்கின்றது.

இந்த வேறுபாட்டை பெற்றோர்கள் தாங்களாகவும் செய்கின்றார்கள்; வரக் கூடிய மாப்பிள்ளைகள் வைக்கும் கோரிக்கைக்குத் தக்கவும் இந்த வேறுபாட்டைச் செய்கின்றார்கள். இங்கு தான் வரதட்சணையின் முதல் விபரீதத்தை, மோசமான விளைவுகளை நாம் பார்க்கிறோம்.
பிள்ளைகளுக்கு மத்தியில் தாங்களாக வேறுபாடு காட்டினாலும், மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினாலும் அல்லாஹ்விடத்தில் அந்தப் பெற்றோர்கள் நிச்சயமாகக் குற்றவாளிகள் தான்! தாங்களாகவே வேறுபாடு காட்டினால் பெற்றோர்கள் அப்பாவத்திற்கு முழுப் பொறுப்பாளி ஆகின்றார்கள். மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினால் பெற்றோருடன் சேர்த்து மாப்பிள்ளைகளும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள்.

“அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீதமாக நடங்கள்! என்னைப் பாவத்திற்கு சாட்சியாக்காதீர்கள்!” என்ற நபி (ஸல்) அவர்களின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை கருத்தில் கொண்டு பாருங்கள். இந்த வரதட்சணைக் கொடுமை எந்த அளவுக்குப் பெற்றோர்களை தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் நீதம் தவற வைக்கின்றது? எனவே வரதட்சணை வாங்கக் கூடியவர்கள் இந்தப் பாவத்திற்காகவும் அல்லாஹ்விடம் தண்டனை பெற்றாக வேண்டும். அல்லாஹ் காப்பானாக!

பாகப் பிரிவினையா? பாவப் பிரிவினையா?

வரதட்சணை வாங்குவதால் ஏற்படும் தீமைகளில் மிக மோசமான தீமை, பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்துக்களை அவர்களுக்குப் போய் சேர விடாமல் தடுப்பதாகும்.

நாங்கள் எங்கே தடுக்கின்றோம் என்று வரதட்சணை வாங்குபவர்கள் கேட்கலாம். அதற்கான விளக்கம் இதோ!
பொதுவாக சொத்துக்கள் பங்கு வைக்கப்படுவது, சொத்தின் உரிமையாளர் இறந்த பிறகு தான்! ஆனால் வரதட்சணைக் கொடுமை இங்கும் அநியாயமாகப் பாய்கின்றது. மாப்பிள்ளைகள், பெண்ணைப் பெற்ற தகப்பனிடம் நகை, தொகை, நஞ்சை, புஞ்சை என்று கோருகின்றனர். தகப்பனார் தனது மகளுக்காக தான் உயிருடன் இருக்கும் காலத்தில் மேற்கண்டவற்றை அன்பளிப்பாகக் கொடுத்து திருமணம் முடித்து வைக்கின்றார். தகப்பனார் இறந்ததும், அவரது சொத்துக்கள் பாகப்பிரிவினை சட்டப்படி அந்தப் பெண்ணுக்கும் சொத்துக்களின் உரிய பங்கு போய் சேர வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு சேர்கின்றதா என்றால் இல்லை!
பெண்ணின் சகோதரர்கள் அவளை அழைத்து, “உன்னைக் கட்டிக் கொடுக்கும் போது இவ்வளவு தொகை பணமாகவும், பொருளாகவும் தந்திருக்கின்றார். அதன் மதிப்பு இவ்வளவு ரூபாய் ஆகின்றது.

எனவே இப்போது சொத்தில் உனக்குரிய பங்கை எங்களுக்காக விட்டுக் கொடு” என்று அன்பாகவோ, அதட்டலாகவோ பேசி அப்பெண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தை அநியாயமாக அபகரித்து விடுகின்றார்கள்.
ஒரு சில ஊர்களில் பெண்கள் சொத்தில் பங்கு கேட்பதே பாவம் என்று பெண்களே நினைக்கின்றார்கள்.

இந்தக் கொடுமை தமிழக முஸ்லிம்களிடத்தில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தகப்பன் இறந்த பிறகு பங்கு வைக்கப்பட வேண்டிய சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் போது வழங்கிய அன்பளிப்பை எப்படிக் கழிக்க முடியும்? இதைக் காரணம் காட்டி அந்தப் பெண்ணின் சொத்துரிமையை எப்படி மறுக்க முடியும்? பாகப்பிரிவினையைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் சொல்லி விட்டுக் கூறுவதைக் கவனியுங்கள்!
இவை அல்லாஹ்வின் வரம்புகள்.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான்.

அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 4:13,14)

அல்லாஹ்வின் இந்த வரம்புகளை மீறினால் இப்படி மீறுபவர்கள் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றான்.

வரதட்சணைக் கொடுமை பற்றி மக்களிடம் சொல்லும் போது, மற்ற மற்ற மக்களை விட்டு விடுவோம். ஏகத்துவவாதிகளே இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஏகத்துவவாதிகள் எல்லோரையும் இப்படிச் சொல்லவில்லை. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சொந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தைப் புறக்கணித்து பட்டினி கிடப்பவர்களும் இருக்கின்றார்கள்.

இன்னும் சொல்லப் போனால் இந்தத் தீமைகளையெல்லாம் கருத்தில் கொண்டு வரதட்சணை மட்டுமல்ல, பெண் வீட்டில் தாங்களே விரும்பித் தரும் அன்பளிப்பைக் கூட வாங்க மாட்டேன்; பொட்டு நகை கூட போடாமல் வந்தால் தான் திருமணம் முடிப்பேன் என்று சபதம் செய்த ஏகத்துவவாதிகளும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயம், இதையெல்லாம் பெரிய தீமையாக நினைக்காமல் வரதட்சணை வாங்கப் படும் திருமணங்களில் போய் கலந்து கொண்டு, அதை நியாயப்படுத்துபவர்களும் ஏகத்துவவாதிகள் என்ற பெயரில் இருக்கத் தான் செய்கின்றார்கள்.

வரதட்சணை வாங்குவது பெண்களின் சொத்துக்களைப் பறிக்கும் அளவுக்குக் கொண்டு செல்கின்றது. சொத்துக்களைப் பறிப்பது அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதாகும். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவது நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்கின்றது. இப்படி நிரந்தர நரகத்தைப் பெற்றுத் தரும் இந்த வரதட்சணையை வாங்கலாமா? அவ்வாறு வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களில் போய் கலந்து கொள்ளலாமா? முடிவெடுங்கள்!

இது போன்ற திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வரதட்சணை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ளாமல் முற்றிலும் புறக்கணியுங்கள்!
tntj.net என்ற தளத்திலிருந்து….